கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து நூலகங்களை செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக மூடப்பட்ட நூலகங்கள் 75 நாட்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு ஜூலை 24ம் தேதியான இன்று முதல் பொது நூலகத் துறையை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
நூலகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
- தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேசைகள், நூற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே மறுநாள் வாசகர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும்.
- கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை. அங்கிருந்து வரும் வாசகர்களை நூலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது.
- 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
- நூலகத்திற்கு வரும் வாசகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக்கவசம், கைகளை சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே நூலகத்திற்குள் அனுமதித்தல் வேண்டும்.
- நூலக நுழைவு வாயிலில் வாசகர்கள் கைகளை சுத்தம் செய்திட சோப் மற்றும் தண்ணீர் அல்லது கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும்.
- நூலகத்திற்கு வரும் வாசகர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களையும் வெப்பபானி கொண்டு சோதித்த பின்பே நூலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
- நூலகத்திற்கு வரும் வாசகர்கள், குறைந்தது 6 அடி இடைவெளியுடன் தனி மனித இடைவெளியினை கடைப்பிடித்து, வரிசையில் நின்று ஒவ்வொருவராக நூலகத்திற்குள் வருவதற்கு ஏதுவாக நூலக வாசலின் தரையில் உரிய இடைவெளியில் வட்ட குறியிட வேண்டும்.
- அனைத்து பணியாளர்களும் கட்டாயம் அலுவலகப் பணி நேரங்களிலும், பயனா நேரங்களிலும் அவர்களது வீட்டிற்குச் செல்லும் வரை அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும்.
- நூலகத்தையும், அதில் உள்ள கழிவறைகளையும் உரிய கால இடைவேளைகளில் சுத்தப்படுத்துதல் வேண்டும். குளிர்சாதன வசதி உள்ள நூலகங்கள் அல்லது பிரிவுகளில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும்.
- நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எந்தெந்த பிரிவுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் வைத்திருக்க வேண்டும்.
- மேலும், Covid-19-ஐ கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள அறிவுரைகள் / பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- நூலகங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், சிகிச்சையகங்களைக் கண்டறிந்து அதற்கான விவரங்களை பட்டியலிட்டு நூலகத்தில் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
- சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி நூல்கள் பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவுகளை பயன்படுத்தும் வாசகர்கள், இப்பிரிவில் உரிய சமூக இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வண்ணம், இருக்கைகளை உரிய இடைவெளி விட்டு அமைத்தல் வேண்டும்.
- மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இருக்கைகளில் 50% இருக்கைகளுக்கு மிகாமல் மட்டுமே அமைத்தல் வேண்டும் மற்ற இருக்கைகளை இப்பிரிவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும்.
- வாசகர்கள் கோரும் குறிப்புதவி நூல்களை நூலகர்கள் மற்றும் நூலகப்பணியாளர்கள் நூல் அடுக்கிலிருந்து எடுத்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் வேளையில் நூலகர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
- சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு / குறிப்புதவி பிரிவு / போட்டித் தேர்வு பயிற்சி மையம் பிரிவிற்கு ஒரே நேரத்தில் அதிக அளிவிலான வாசகர் வரும் வேளைகளில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- சொந்த நூல்கள் படிக்கும் பிரிவை பயன்படுத்தும் வாசகர்கள் எடுத்து வரும் நூல்கள், மடிக்கணினி, மற்றும் இதர பொருட்களை சார்ந்த வாசகர்களை தவிர வேறு வாசகர்களுடன் பகிர அனுமதிக்க கூடாது.