தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வத்தை அதிகரிப்பதற்காக அரசு தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த தேர்வு நடக்க உள்ள நிலையில், தேர்விற்கான நுழைவு சீட்டு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திறனறி தேர்வு:
பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை திட்டங்களையும் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை நடந்து வந்த திறனறி தேர்வானது, நடப்பாண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு விட்டன. அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி என தமிழகத்தை சேர்ந்த அனைத்து பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு தமிழ் பாட பகுதியை அடிப்படையாக கொண்டு தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ,1,500 வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கின் மூலம் அளிக்கப்பட உள்ளது.
தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி நடக்க உள்ள நிலையில், நுழைவு சீட்டு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுக்கான நுழைவு சீட்டை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் user id மற்றும் password ஐ உள்ளிட்டு அக்டோபர் 7 ம் தேதியான இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.